Showing posts with label இட. Show all posts
Showing posts with label இட. Show all posts

May 10, 2018

சாதி இல்லை என்று கூறும் அரசாங்கம் சாதிச்சான்றிதழ் கேட்கலாமா?

வானொலி நிகழ்ச்சியிலும் தொலைக்காட்சியிலும் குறிப்பாக  இளைஞர்கள் இக்கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள். அவர்களுக்கும் இக்கேள்வி நியாயமாகக் பட்டாலும்,இது அவர்களின் அறியாமை அடையாளமாகும். சாதியில்லை என்று சொல்லிவிடிவதால் சாதி இல்லாமல் போகாது. சாதியை ஒழிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

முள்ளை முள்ளால் எடுப்பது போன்று,சாதியை சாதியடிப்டைச் சலுகையால் ஒழிப்பது என்பது இம் முயற்சி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எச்சமுதாயம் சாதியின் பெயரால் அடக்கப்பட்டதோ,உரிமை பறிக்கப்பட்டு, வாய்ப்புத் தடுக்கப்பட்டதோ அச்சமுதாயத்திற்கு ஏதாவது உதவி செய்து உயர்த்த வேண்டுமானால் அச்சாதியின் மூலமாகத்தானே அவர்களை அடையாளங்காண வேண்டும்?

நமது நிலமாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான உரத்தை நாம் போடுவதில்லை. ஒவ்வொரு நிலத்தையும் மண் பரிசோதனை செய்து அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்பவே உரம் இடமுடியும். அதேபோல், சாதியால் அடையாளங் கண்டு, சலுகை அளிக்க சாதியைக் கேட்க வேண்டியுள்ளது. இன்றைக்கு எல்லாச் சாதியினரும் ஒரே மாதிரியான சமுதாய நிலையையும் கல்வி நிலையையும் பெற்றிக்கவில்லை.

சில சாதி இவற்றில் உயர்ந்து நிற்கின்றனர். சில சமுதாயத்தாவர் தாழ்ந்து கிடக்கின்றனர். வீழ்ந்து கிடக்கின்றவர்களை உயர்த்த ஒரு ஏற்பாடு,உதவ வேண்டும். அதுவே இடஒதுக்கீடு. உயர் சாதிப் பிள்ளையும, தாழ்ந்த சாதியில் கூலியாளின் பிள்ளையும் ஒன்றாக போட்டியிட முடியுமா? போட்டியிட்டால் உயர் சாதிப் பிள்ளையே வெற்றி பெறும். எனவே, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை கைத்தூக்கிவிடும் கருவியாக இடஒதுக்கீடு அமைகிறது. அதைத் தர சாதியை அறிய வேண்டியுள்ளது. அதனால்தான் பள்ளிக்கூடங்களில் கேட்கப்படுகின்றது.

தாழ்த்தப்பட்டவர்களிலும் மேல்நிலையில் உள்ளவர்கள் உள்ளார்களே! அவர்களுக்கு  ஏன் சலுகை. அச்சாதியில் உள்ள கீழ்நிலை மக்களுக்குத்தானே இடஒதுக்கீடு வேண்டும் என்ற கேள்வி நியாயமான கேள்வி. அதற்கு அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படும் சலுகையைச் சரியாகப் பின்பற்றினாலே இக்குறை நீக்கப்படும்.

அதாவது, சமுதாயத்திலும் கல்வியிலும் பின் தங்கியவர்களுக்குச் சலுகை தர வேண்டும் என்கிறது சட்டம். நாம் சமுதாயத்தை மட்டும்(சாதியை மட்டும்) பார்க்கிறோம். கல்வி நிலையைப் புறக்கணிக்கிறோம். அந்நிலையை மாற்றி, இடஒதுக்கீடு பெறும் சாதியிலே கல்வியில் தாழ்ந்துள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு தந்தால் அச்சாதியில் கல்வியறிவு பெற்ற(பட்டம் பெற்று) பெற்றோரின் பிள்ளைகள் தானே ஒதுக்கப்பட்டுவிடும்.இதன் மூலம், இடஒதுக்கீடு பெறும் சாதியில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அப்பயன் சென்றடையும். சரியான சமூக நீதியாகவும் நிலைக்கும்.

தட்டச்சு உதவி: இரம்யா கதிர்வேல்
குறிப்பு: மஞ்சை வசந்தனின் தப்புத்தாளங்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரை இது.