Oct 22, 2018

ராஜீவ்காந்தி சாலை நாவல் - ஒரு பார்வை


எழுத்தாளர் விநாயக முருகன் எழுதிய "ராஜீவ்காந்தி சாலை" நாவலை அண்மையில் படித்து முடித்தேன். "ராஜீவ்காந்தி சாலை" நாவல் நான் படிக்க விரும்பி நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த புத்தகம். உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடு இது.

எழுத்தாளர் விநாயக முருகன்

உயிர்மை பதிப்பகத்தை அடிக்கடித் தொடர்புகொண்டு எப்போது "ராஜீவ்காந்தி சாலை" நாவல் வெளிவரும்? எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். விரைவில் வெளிவருவதாக கூறினார்கள். உயிர்மை இதழில் சென்னை புத்தகக் காட்சியில்(2018) "ராஜீவ்காந்தி சாலை" நாவல் வெளிவருவதாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அங்குதான்(சென்னை புத்தகக் காட்சி) இந்தப் புத்தகத்தை வாங்கினேன்.

நான் ஐடியில் வேலை செய்வதால் படிப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாகவும், ஆர்வமாகவும் இருந்தது. ஐடி என்று சொல்லக்கூடிய தகவல்தொழில்நுட்ப துறையில் நடப்பவைகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார் விநாயக முருகன்.

நாவலில் வரும்  கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளக்கூடிய கருத்துக்களை வாசிக்கும் போது இதையெல்லாம் எழுவதற்கு ஒரு தைரியம் வேணும்யா என நினைத்துக்கொண்டேன்.

பார்ப்பனர்கள் - பெரியார் - காந்தி கொலை - ஐடி கம்பெனிகளுக்குள் பார்ப்பனர்கள், மலையாளிகள் செய்யும் அரசியல் என ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார் நாவலில்.

விநாயக முருகன் முற்போக்கானவர். அவருடைய முகநூல் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரியும். நான் அவருடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன். அவர் எழுதிய "சென்னைக்கு மிக அருகில்", "நீர்" ஆகிய நாவல்களை ஏற்கனவே படித்திருக்கிறேன். "சென்னைக்கு மிக அருகில்" நாவலிலும் பார்ப்பனர்கள் - பெரியார் பற்றிய உரையாடல்கள் வரும்.

உயிர்மையில் விநாயக முருகன் எழுதிய "பிராய்லர் பண்ணைகளும் திறமை இல்லா திண்டாட்டமும்" கட்டுரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://marinabooks.com/category?authorid=6448

ஐடி துறையில் இருக்கும் ஒவ்வொருவரும், ஐடி துறையில் அப்படி என்னதான் நடக்கிறது என தெரிந்து கொள்ள விரும்புவோரும் அவசியம் படிக்க வேண்டிய நாவல்.

எந்த புத்தகத்தைப் படித்தாலும் அதில் எனக்கு பிடித்த வரிகளை அடிக்கோடிட்டு வைப்பது என்னுடை பழக்கம். அவ்வாறு "ராஜீவ்காந்தி சாலை" நாவலில் எனக்கு பிடித்த வரிகள் என அடிக்கோடிட்டு வைத்தவைகள்...

"உதாரணத்துக்கு அமெரிக்காவில் இருக்கும் மருந்து கம்பெனிக்கு சாஃப்ட்வேர் தேவைப்பட்டால் அவர்கள் ஆட்களைப் போட்டு அதை எழுதச் சொல்லமாட்டார்கள். இந்தியா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் ஐடி நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை தருவார்கள். அவர்களுக்கு வேலைசெய்யும். சாஃப்ட்வேர் தயாரித்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிடும். ஆனால் சில புத்திசாலிகள் சாஃப்ட்வேர் தயாரித்துக் கொடுத்தாலும் அதன் பிறகு பராமரிப்பு அது இதுவென்று சொல்லி டேரா போட்டு இன்னும் காசு கறப்பார்கள்."

"இங்கிருந்த காடுகளை அழித்துத்தான் இந்த மென்பொருள் நிறுவனங்கள் வளர்ந்துள்ளன. அதே நிறுவனங்கள் இன்று "மரங்களை" நடுவோம். மரங்களைப் பாதுகாப்போம்" எனப் பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால் சந்திராவுக்கு உள்ளுக்குள் சிரிக்கத் தோன்றியது."

"மற்ற எத்தனையோ தொழில்களைவிட இந்தத் தொழில் மூலமே இந்தியாவுக்கு நேர்மையான வெளிப்படையான வரிகள் கிடைக்கின்றன. அதன் வழியாகவே இந்தியாவில் சாலைகள், பாலங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கட்டப்படுகின்றன என்று சந்திரா போன வாரம்தான் என்டிடிவி பேட்டியில்கூடச் சொல்லியிருந்தார்."

"சாலைகளே தேசத்தின் அடையாளம் முன்னேறிய தேசத்தின் மனித குல வளர்ச்சியை அளக்க விரும்பினால் அதன் சாலைகளை அளந்தால் போதும். சாலைகளே மனித நாகரிகங்களை இணைக்கும் பாலங்கள். இரண்டு வெவ்வேறு கலச்சாரப் பின்னணி கொண்டவர்கள் உறவாடவும் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் சாலைகளே பெரிதும் உதவுகின்றன."

"இந்த மென்பொருள் நிறுவனங்களில் இப்படித்தான் எழுபது சதவீத ஆட்கள் உயிரைக் கொடுத்து வேலைசெய்வார்கள். மீதியுள்ள முப்பது சதவீதம் பேர் வேலை எதுவும் செய்யாமல் ஓபி அடித்துப் பொழுதை ஓட்டுவார்கள். அந்த எழுபது சதவீத ஆட்கள் இவர்கள் வேலையையும் சேர்த்துச் செய்வார்கள். ஆனால் பணி உயர்வு, சம்பள உயர்வு, பாராட்டுகள் என்று வரும்போது மட்டும் அந்த முப்பது சதவீத ஆட்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். பொதி சுமக்கும் மாடுகள் மேல்தானே மேலும் மேலும் அடுக்கிவைப்பார்கள்?"

"இந்த ஐ.டி கம்பெனிகளில் எப்போது எந்த தகுதி அடிப்படையில் யாருக்கு பதவியுயர்வு வருமென்றே சொல்ல முடியாது. எம்.சி.ஏ படித்தவனைவிடப் பி.எஸ்.சி படித்தவன் அதிக சம்பளம் வாங்குவான். பத்து வருட அனுபவம் உள்ளவனைவிடப் பதினைந்து வருட அனுபவம் உள்ளவன் குறைந்த சம்பளம் வாங்குவான். தனியார் கல்லூரியைவிட ஐஐஎம்மில் படித்து வருபவனுக்கு சம்பளம் அதிகம். கலைக்கல்லூரியிருந்து கணிப்பொறியியல் படித்து வந்தால் அடிமாட்டுச் சம்பளம் கொடுப்பார்கள். பெரிய நிறுவனத்திலிருந்து இரண்டு வருட அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எவனாவது இன்டர்வியூவுக்கு வருவான் அவனுக்கு ஆண்டுக்கு பத்து லட்ச ரூபாய்ச் சம்பளம் கிடைக்கும். அதுவே சின்னச் சின்ன, பேர் தெரியாத ஐடி நிறுவனங்களிலிருந்து பத்து வருட அனுபவத்தை வைத்துக்கொண்டு இன்னொருவன் இன்டர்வியூவுக்கு வருவான். அவனுக்கும் ஆண்டுக்குப் பத்து லட்ச ரூபாய் சம்பளம் தருவார்கள். காரணம் கேட்டால் இன்டர்வியூவுக்கு ஆட்கள் எடுக்கும் ஹெச்.ஆர் ஆட்கள் ஏதேதோ சொல்வார்கள். இது போன்ற ஐடி நிறுவனங்களுக்குச் குறைந்த  கூலிக்கு ஆட்களை பிடித்து தருவதில்தான் ஹெச்.ஆர் ஆட்களின் திறமையை மதிப்பிடுவார்கள். இதனாலேயே எந்தக் கம்பெனி அதிக சம்பளம் தருகிறதோ அதற்குத் தாவித் தாவிச் செல்பவர்கள் என்னும் பெயரை ஐடி ஆட்கள் எடுத்திருந்தார்கள். அரசியல் கட்சிகள்போல இப்படித் தாவித் தாவி வருபவர்களையும் நிறுவனங்கள் வரவேற்று வேலை கொடுக்கத்தான் செய்தன."

"ஒரு காலத்தில் அதிகாரம் ராசாக்களிடம் குவிஞ்சு கெடந்துச்சு. சபையில கெடந்துச்சு. ஆலோசனை சொல்றேன்னு அங்கப் பாப்பானுங்க நொழஞ்சாங்க. பொறவு அதிகாரம் ராசா சபைகளைவிட்டு வெளியே வந்து கோவிலுக்குப் போச்சு. பாப்பானுங்க அங்கயும் நகர்ந்தானுங்க. பொறவு வெள்ளைக்காரன் வந்தான். அதிகாரம் கவுருமெண்ட்டு ஆபிசருங்க கைக்குப் போச்சு. இவனுங்க அங்கயும் போய் ஜால்ரா போட்டாங்க. இப்ப அதிகாரம் டெல்லிலேயும் சாப்ட்வேர் கம்பேனிலேயும் அமெரிக்காவுலேயும் இல்ல கெடக்கு. ஆனா ஒண்ணு செட்டியார். ஆயிரந்தான் சொல்லுங்க. எங்க, எப்ப அதிகாரமும் பணமும் கெடைக்குமுன்னு  கணிக்கறதுல பாப்பானுங்கள மிஞ்ச முடியாது."

"ஒரு காலத்துல தமிழ்நாட்டுல பாப்பாரப் பசங்களத் தொரத்தித் தொரத்தி அடிச்சாங்க. ஆனா அவங்க சத்தமே இல்லாம இந்தியும் இங்கிலீசும் படிச்சுட்டு இன்னைக்கு டெல்லிலேயும் அமெரிக்காவுலேயும் உட்கார்ந்துகிட்டுத் தமிழ்நாட்டை ஆட்டிப் படைக்கறாங்க. இவங்க வச்சதுதான் சட்டம். ஜெயலலிதா வந்தாலும் சரி, கருணாநிதி வந்தாலும் சரி. இதுதானே நிலைமை."

"வெள்ளைக்காரன் ஒன்னும் சும்மா நாட்டை விட்டுப் போகலை. போகும்போதே இங்க அருக்கற ஜனங்களுக்கு இங்கிலீஷ் ஆசையை மூட்டிவிட்டுட்டுப் போயிட்டான். போற மாதிரி போய் இங்க இங்கிலீஷ் தெரிஞ்ச பாப்பான்களை அவன் நாட்டுக்கு வேலை செய்ய அழைச்சுட்டுப் போயிட்டான். இவனுங்களும் காசு எங்க இருக்குதுன்னு தொடையை விரிக்கிற தேவடியா கணக்கா விரிச்சுப் போட்டு கெளம்பிட்டானுங்க. திரும்ப இங்க வந்து கங்காணி வேலை செய்றாங்க. நோகாம நோம்பு கும்பிடுற பயலுங்க பாப்பானுங்க."

"உடம்பு மொத்தத்தையும் தண்ணிக்குள்ள வச்சிருந்தாலும் தலையை மேலேயே வச்சிருக்கிற தண்ணிப் பாம்பு மாதிரியில்லை இந்தப் பயலுங்க. இவனுங்க திருட்டுத்தனம், மொள்ளமாரித்தனத்தைத் தெளிவாகப் புரிஞ்சுவச்சிருந்தவங்க ரெண்டு பேரு. ஒருத்தர் காந்தி. இன்னொருந்தர் பெரியார். காந்தியைவிட்டு வச்சா இவனுங்க பொழைக்க முடியாதுன்னு அவரையும் கொன்னுட்டாங்க. பெரியாரைத்தான் இவனுங்களால மயிரக்கூடப் பிடுங்க முடியல. தன்னோட கைத்தடியால தொரத்தித் தொரத்தி இல்ல அடிச்சார்."

இந்த ஐடி கம்பெனிங்க வந்துதான் ஊருக்குள்ள ஜாதிக் கலப்பு நடந்துடுசுச்சு. எவன் என்ன ஜாதின்னே தெரியமாட்டேங்குது. பேரை வச்சு ஜாதியக் கண்டுபிடிக்கலாமுன்னு பார்த்தாக்கூட எல்லாப் பயலுகளும் ரமேசு, சுரேசுனுன்னுல்ல வச்சிக்கிட்டுத் திரியறானுங்க. சேரிப் பசங்களும் அங்கதான் வேலைசெய்றாங்க. நம்ம ஆளுங்களும் அங்கதானே வேலைசெய்யுறாங்க?

"ஆனா பெரியாருக்குதான் நாம நன்றி சொல்லணும்" என்று சந்திரா ஆரம்பித்தார். "என்னது, பெரியாரா?" ரங்கா ஆச்சரியத்தோடு கேட்டார். "அந்தாளு மட்டும் இல்லன்னா நானும் இந்நேரம் சீரங்கத்துல கோவில்ல மணியடிச்சுட்டுப் பிரசாதம்தான் சாப்பிட்டுண்டு இருந்திருப்பேன்."

"ஆனா பாரு ரங்கா. நாம இவ்வளவு தூரம் கடல் கடந்து போயி மாடர்னா மாறி வாழக் கத்துக்கிட்டோம். இவாளால இன்னும் சொந்த ஜாதியைக்கூடத் தாண்டி வர முடியல. காலையில பேப்பர் பார்த்தீயா? வன்னியப் பொண்ணை லவ் செஞ்சுட்டான்னு அவா இருந்த தலித் கிராமத்தை எரிச்சுட்டா. எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுன்னு இவாளப் பார்த்துதான் நாம சொல்லணும்."

"பெரும்பாலானோர் கல்லூரி முடித்தவுடனேயே ஐடி கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்துவிடுவார்கள். முதல் மாசமே சுளையாக நாற்பதாயிரம் கைக்கு வரும். அவ்வளவு பணத்தை நம்பி யாரும் வீட்டில் இருக்கமாட்டார்கள். அது போன்ற ஆட்கள் நல்ல உயர்தர சென்ட் பாட்டில்கள் வாங்குவார்கள். வாரத்திற்கு இரண்டு செட் விலை உயர்ந்த பிராண்டட் ஆடைகளை வாங்குவார்கள். மாதம் ஐந்துமுறை அழகுநிலையம் செல்வார்கள். மிச்சம் உள்ள பணத்தைப் பார்ட்டிகளில் செலவழிப்பர்கள். சிலர் செல்ஃபோன்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மார்க்கெட்டில் வரும் புதுப் புது எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிக்கொண்டே இருப்பார்கள். செல்ஃபோனை அடிக்கடி மாற்றுவது ஒருவித மனவியாதி."

"அது ஏன் இந்தப் பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் தலையில் எல்லாம் பேப்பர் குல்லா வைத்து முகத்தில் கேக்கை அப்பி அலங்கோலம் செய்து பின்னர் படம் எடுக்கிறார்கள்? ஏன் சமோசா கூடத்தான் அங்கு இருக்கிறது? அதை எடுத்து முகத்தில் அப்பிக் கொள்ள வேண்டியது தானே."

"திருமணத்திற்குப் பின்பு இரவு பகலாக வேலை செய்வதைக் குறைத்துக்கொண்டான். அதுவும் வார இறுதி நாட்களில் அலுவலகம் செல்வதில்லை. தேவைப்பட்டால் வீட்டிலிருந்து வேலைசெய்தான். என்னதான் இந்த ஐடி நிறுவனங்களில் மாடு மாதிரி வேலை செய்தாலும் அங்கு அரசியல்  செய்யத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே எல்லாச் சலுகைகளும் கிடைக்கும் எனத் தெரிந்து விட்டது. மாடுபோல வேலை செய்தால் யாராவது அமெரிக்கன் 'குட் ஜாப்' என்று பாராட்டி மின்னஞ்சல் அனுப்புவான். பைசாவுக்குப் பிரயோசனம் இருக்காது. அதே நேரம் இரண்டு நாளில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே நாளில் செய்வதில் இன்னோர் ஆபத்தும் உண்டு. இன்னும் அதிகமாக வேலையைத் தலையில் கட்டுவார்கள். எந்த மாடு அதிகமாக பொதி சுமக்கிறதோ அதன் தலையில்தானே இன்னும் அதிகமாகச் சுமையை ஏற்றுவார்கள். கொஞ்சமாக வேலை செய். அதிகமாக அதை வெளிக்காட்டு என்பது அங்கே சர்வைவலுக்கான தந்திரம். அது தெரியாதவர்கள் அதிகமாக வேலைசெய்து பதவி உயர்வு கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தார்கள். கண்ணி வெடிகளில் காலை வைத்து எடுக்கவும் முடியாமல், விடவும் முடியாமல் தவித்தார்கள்."

"நிறுவனங்கள் கொடுக்கும் சொற்பப் பணமும் இன்ஷூரன்ஸ் பணமும் குடும்பத்துக்குச் சென்று சேரும். இது தவிர அவர்கள் வேலைசெய்திருந்த டீம் நண்பர்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு ஏதாவது தருவார்கள். என்ன இருந்தாலும் ஓர் உயிரின் மதிப்பை எதைக் கொடுத்து நிரப்ப முடியும்?"

"அதிலும் பெண்கள் எல்லாம் கொழுத்த ஆடுகள்போலவே இருந்தார்கள். ஆண் ஆடுகளுக்குத் தலை வழுக்கை விழுந்து தொந்தி கொழுத்திருந்தது. உடற்பயிற்சி எதுவும் இல்லாமல் இப்படித் தின்றால் எழுந்துகூட வெளியில் செல்லாமல் வேலை பார்த்தால் ஹார்ட் அட்டாக் வராமல் வேறு என்ன வரும்? இன்னும் சிலர் இருந்தார்கள். அவர்கள் இருக்கையிலிருந்து அரை மணிக்கு ஒருமுறை எழுந்து வெளியில் சென்றுவிட்டு வருவார்கள். சரி. நடந்து உடலுக்கும் மனதுக்கும் உழைப்பு தருகிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் நேராக பேன்டரி செல்வார்கள். பேப்பர் குவளைகளில் தேநீர் எடுத்துக்கொண்டு லிப்ட்டில் இறங்கிச் செல்வார்கள். அலுவலகத்தின் வெளியில் சென்று தேநீர் குடித்தபடி சிகரெட் பிடிப்பார்கள். அரை மணி நேரத்துக்கு என்று கணக்கிட்டால்கூட நாளொன்றுக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் குடிப்பார்கள். அவர்களும் சீக்கிரமாக மேலே சென்றுகொண்டிருக்கிறார்கள்."

"முன்பெல்லாம் பொருள் பழசானால் அல்லது பழுதானால் மட்டும் அதைத் தூக்கிப் போட்டு விட்டுப் புதிதாக வேறு பொருள் வாங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம் புதிதாக இருக்கும் பொருளையே தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்று வாங்குகிறார்கள். ஒன்றை வாங்கி அதை எப்படிப் பயன்படுத்துவது என முழுதாகத் தெரிந்துகொள்வதற்குள் அடுத்த பொருளை வாங்க மனம் பறக்கிறது. இப்போதெல்லாம் பொருட்கள் பழசாவதில்லை. தொழில்நுட்பம் பழசாகிறது. அதனால்தான் புதுசு புதுசாகப் பொருட்களை வாங்குகிறார்கள் எனத் தோன்றியது."

"இந்த ஐடி கம்பெனியில் வேலைபார்த்தால் ட்ரீட் கொடுத்து கொடுத்தே சொத்து அழியும்போல."

"வேலை இருந்தால் செய். இல்லாவிட்டால் வீட்டுக்குப் போ. எட்டு மணிநேரத்தில் முடிக்க வேண்டிய வேலையப் பன்னிரண்டு மணிநேரம் செய்தால் பிரச்சினை உன்னிடம்தான் இருக்கிறது. ஏன் எட்டு மணிநேரத்தில் அதை முடிக்கவில்லை என்று யோசி. எட்டு மணிநேரத்தில் முடிக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசி."

"நாங்க அப்படி இருக்க முடியாது. மாசம் ஐம்பதாயிரம் வீட்டுக்கு லோன் கட்டுறோம். வருஷத்துக்கு ரெண்டு செல்ஃபோன் மாத்தணும். அடிக்கடி பார்ட்டி, ட்ரீட்னு வைக்கணும். பசங்கள இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கவைக்கணும். காருக்கு லோன் கட்டணும். இதுக்கு லட்ச ரூபாய் வந்தாக்கூட எங்களுக்குப் பத்தாது."

"எப்பவும் எல்லாத்துக்கும் தயாராகவே இருக்கணும். எது வேணா நடக்கலாம். ஆறு மாசத்துக்கு தேவையான பணத்தைச் சேர்த்து வச்சுக்கணும். லோன் அதிகமா வாங்காம இருந்தாலே சமாளிச்சுடலாம்."

"சமீப காலமாக மனிதர்களின் பைத்தியக்காரத்தனம் அதிகரித்து வந்ததாக அவளுக்குத் தோன்றியது. மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்கிறார்கள். தானே சிரித்துக்கொள்கிறார்கள். செல் ஃபோனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். வாகனங்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். காரணம் இல்லாமல் கொலை செய்கிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்குகிறார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கிக்குவிக்கிறார்கள். கடன்காரனுக்குப் பயந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். திருடுகிறார்கள். பொய் சொல்கிறார்கள். கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடுகிறார்கள். சட்டையைக் கிழித்துக்கொண்டு அலைகிறார்கள்."

"இப்போது எங்கே திரும்பினாலும் கார்பரேட் சாமியார்களின் பேனர்கள் இருக்கின்றன. ஆண்களும், பெண்களும் கும்பல் கும்பலாக அவர்களிடம் சென்று யோகா கற்றுக்கொள்கிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் ஊழியர்களுக்கு அல்ல. அந்தச் சாமியார்களுக்கு. அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் புரள்கிறது. யோகா வகுப்புகளுக்கு மாதம் ஐந்தாயிரம்வரைக்கூடச் சில சாமியார்கள் வாங்குகிறார்கள்."

"இவ்வளவு செலவு செஞ்சு யோகா கத்துக்கறத்துக்குப் பதில் சாயங்காலம் அலுவலகத்திலிருந்து கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வீட்டுக்குப் போனால் என்னவென்று நினைத்தான். அதில் சில புத்திசாலிகள் மாலை ஆறு மணிவரை வேலைசெய்துவிட்டுப் பிறகு அலுவலகத்திலேயே நடத்தப்படும் யோகா வகுப்புகளுக்குச் செல்வார்கள். அவர்களைப் பார்த்தால் கார்த்திக்கிற்கு தன் ஊரில் இரவில் ஆலமரத்தில் அமர்ந்திருக்கும் மண்ணாந்தைகள்தான் நினைவுக்கு வரும்."

"எந்தத் தொழிலாளியை நம்பியும் முதலாளி இல்லை. எந்த முதலாளியை நம்பியும் தொழிலாளி இல்லை."