Oct 4, 2016

ஆங்கிலத்தில் மட்டுமே உள்ள 90% அரசு இணையதளங்கள்: தமிழில் இல்லாததால் பொதுமக்கள் பாதிப்பு


தமிழக அரசு இணையதளங்களில் 90 சதவீதத்துக்கும் மேலான இணையதளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்களை அளிக் கின்றன. அவை தமிழில் இல்லாததால் சாதாரண மக்கள் புரிந்துகொள்ள முடியாத அவலநிலை உள்ளது.

ஆட்சி, நிர்வாகம், சட்டம், கல்வி, மக்கள் நல்வாழ்வு, செய்தித் தொடர்பு என நாள்தோறும் அரசு இணையதளங்களின் தேவை பெருகி வருகிறது. அதே வேளையில், எந்தவொரு அரசும் தன் மக்களின் மொழியில் செய்தித்தொடர்பை மேற்கொள் வது காலத்தின் தேவையாகும். தமிழக அரசைப் பொருத்தவரை 37-க்கும் மேற்பட்ட அரசுத் துறை கள், அதன் சார்பு நிறுவனங்கள், 20 அரசு பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட அரசு இணைய தளங்கள் உள்ளன. இவற்றில் மிகக்குறைந்த இணையதளங்கள் மட்டுமே தமிழில் தகவல்களை அளிக்கின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி கூறியதாவது:

தமிழக அரசு இணையதளங் களை ஆய்வு செய்ததில் அவற்றில் தமிழின் பயன்பாடு 8.97 சதவீதம் மட்டுமே உள்ளது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு இணையதளங்களில் ஆங்கி லத்தில்தான் தகவல்கள் இடம்பெற் றுள்ளன. உதாரணமாக, தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழக சட்டப் பேரவை, பதிவுத்துறை உள்ளிட்ட இணையதளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. தமிழக அரசின் சுகாதாரத்துறை இணையதளம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.

அரசு பல்கலைக்கழகங்களில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கலைக்கழக இணையதளம் தவிர வேறு எந்தவொரு பல்கலைக்கழக இணையதளமும் தமிழில் இல்லை. மேலும், தமிழில் தகவல் உள்ள சில இணையதளங்களிலும் முகப்புப் பக்கம் ஆங்கிலத்தில் தான் உள்ளது. தமிழில் தகவல்கள் இல்லாததால் மக்கள் தகவல் பெறுவது தடுக்கப்படுவதோடு, ஒவ்வொரு துறையின் வெளிப்படைத் தன் மையும், பொறுப்புத்தன்மையும் மறைக்கப்படுகிறது.

மத்திய அரசின் 90 சதவீத இணையதளங்களில் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழி களிலும் தகவல்கள் உள்ளன. இலங்கையில்கூட எல்லா அரசு இணையதளங்களும் தமிழில் தகவல்களை அளித்து வரு கின்றன.

ஆனால், தமிழக அரசின் இணையதளங்கள் தமிழில் இல்லை என்பது பெரும் குறை யாக உள்ளது. எனவே, 1956-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில் ‘தமிழக அரசின் இணைய தளங்கள் நிச்சயம் தமிழில் இருக்க வேண்டும்’ என்று சிறு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். அரசு இணையதளங்களில் தமிழில் தகவல்கள் இடம்பெறுவதை தகவல் தொழில்நுட்பத்துறை அல்லது தமிழ் வளர்ச்சித்துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் கணிப்பொறியியல் ஆய்வாளர் துரைப்பாண்டி இது பற்றி கூறும்போது, “இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் செல்போன் உள்ளிட்ட கையடக்க சாதனங்களில்தான் அதிக அளவில் இணையத்தை பயன் படுத்துகின்றனர். இந்நிலையில், பெரும்பாலான தமிழக அரசு இணையதளங்கள் ‘டேப்லெட்’, ‘ஐ-பேட்’, செல்போன் உள்ளிட்ட சாதனங்களின் திரைக்கு ஏற்ப வடிவமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அரசு இணையதள தகவல்களை கணினியில் மட்டும் தான் சரிவர பார்க்க முடியும் என்ற அவல நிலை உள்ளது.

‘ரெஸ்பான்சிவ் வெப் டிசைன்’

எனவே, அனைத்து சாதனங்க ளுக்கும் ஏற்றவாறு ‘ரெஸ்பான்சிவ் வெப் டிசைன்’ வடிவமைப்பில் இணைய தளங்களை வடிவமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களும் தகவல்களை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். மேலும், எந்தவொரு இணையதளத்தையும், அது செல்போனுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பதை கூகுளின் www.google.com/webmasters/tools/mobile-friendly/ என்ற இணையதளத்துக்கு சென்று, தொடர்புடைய இணைய தள முகவரியை பதிவிட்டு அறிந்து கொள்ள முடியும்” என்றார்.

நன்றி: தி இந்து(தமிழ்)