Apr 29, 2016

ஏன் க்னூ லினக்ஸைப் பயன்படுத்த வேண்டும்?

ஏன் மாணவர்கள், கல்வி நிலையங்கள், பொதுமக்கள் ஆகியோர் க்னூ லினக்ஸைப் பயன்படுத்த வேண்டும்? அதன் பின் உள்ள அரசியல், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் அடாவடித்தனம் ஆகியவற்றைப் பற்றி மயூரன் முரளிதரன் அவர்கள் மிக தெளிவாக இந்த[1] கட்டுரையில் விளக்கியுள்ளார்.



கட்டுரையில் இடம்பெற்றுள்ள முக்கியமான செய்திகளில் சில...

===============
இலங்கையிலிருக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்துடனும் தன் கையாட்களுடனும் நேரடியாகவே விவாதித்திருக்கிறேன். ஒரு கேள்வியில் அவர்கள் திணறுவார்கள். அதுதான் திருட்டு வட்டு விவகாரம்.
ஏன் மூன்றாம் உலக நாடுகளில் மைக்ரோசொப்ட் உற்பத்திகள் தாராளமாக கள்ள சந்தையில் கிடைக்கின்றன? தத்தமது நாடுகளின் மக்கள் போராட்டங்களை எல்லாம் ஏகாதிபத்திய உதவியோடு நசுக்கி அழிக்கும் நாட்டு அரசுகள் எல்லாம் ஏன் திருட்டுவட்டுக்களை ஆசீர்வதித்து வளர்க்கின்றன?

இதுதான் சூட்சுமம்.

நீங்கள் எப்போதும் எமது உற்பதிகளுக்கே அடிமைகளாக இருக்கவேண்டும். நீங்கள் எமது உற்பத்திகளை மட்டுமே கற்கவேண்டும். எமது உற்பத்திகளை பயன்படுத்துவதைத்தவிர உங்களுக்கு வேறு எதுவும் தெரிந்துவிடக்கூடாது. எமது உற்பத்திகளை வைத்தேதான் நீங்கள் பணம் பண்ண வேண்டும். பணம் பண்ணுங்கள். தொழில் பண்ணுங்கள். தடையில்லை. ஆனால் எமக்கு கட்டவேண்டிய கப்பத்தை மட்டும் எக்காலத்திலும் நீங்கள் கட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஆம் நவீன கப்பம்.

தகவற் தொழிநுட்பத்தில் எந்த உச்சிக்கு நீங்கள் சென்றாலும், அடிப்படையான மென்பொருட்களை நீங்கள் அவர்களிடமே வாங்கவேண்டும். லைசென்ஸ் என்ற பெயரில் அவர்களுக்கு கப்பம் கட்டிக்கொண்டிருக்கவேண்டும். அவர்களைத்தாண்டி தொழிநுட்பம் இல்லை. அவர்களைத்தாண்டி எதுவும் இல்லை.

உங்கள் இராணுவப்புலனாய்வு அலுவலகத்தின் அதியுயர் ரகசியம் காக்கும் கணினி, அவர்களது மென்பொருட்கள் மீதுதான் இயங்கும். அந்த மென்பொருட்கள் எந்த தகவலை யாருக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது என்பதை நீன்கள் கண்டுபிடிக்க வழியில்லை. எல்லாம் மூடிய தொழிநுட்பம்.

===============

க்னூ லினக்ஸைப் பயன்படுத்துவோம், திறந்த மூல மென்பொருள்களுக்கு ஆதரவு அளிப்போம், சுதந்திர மென்பொருள்களை மட்டுமே பயன்படுத்துவோம். உலகின் மிகப்பெரிய புரட்சியெல்லாம் ஒரு தனிமனிதனிடமிருந்தே தொடங்கியிருக்கின்றன.

வாருங்கள் லினக்ஸ் உலகத்திற்கு!


No comments: