Jul 31, 2011

இந்திய நீதிமன்றங்களில் உபுண்டு லினக்ஸ்

இந்தியாவினுடைய அனைத்து நீதிமன்றங்களும் கடந்த நான்கு வருடங்களாக RHEL (Redhat Enterprise Linux) 5.0 யினை பயன்படுத்திக்கொண்டிருந்தன. ஆனால் தற்பொழுது இந்தியாவினுடைய உச்சநீதிமன்றம், இந்தியாவினுடைய அனைத்து நீதிமன்றங்களும் உபுண்டு 10.4 -னைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. தோராயமாக 17,000 நீதிமன்றங்கள் இருக்கலாம். மேலும் உச்ச நீதிமன்றம் , அனைத்து நீதிமன்றங்களுக்கும் மாற்றியமைக்கப்பட்ட (மறு உருவாக்கம் செய்யப்பட்ட) உபுண்டு DVD யினை கொடுத்துள்ளது.

ஒவ்வொரு நீதிமன்றமும் குறைந்தது ஐந்து கணினிகளைப் பயன்படுத்தி கொண்டு இருக்கிறது. ஐந்து கணினிகளையும் 17,000 நீதிமன்றங்களுடன் பெருக்கினால் , 85,000 கணினிகள் உபுண்டு லினக்ஸைப் பெறும்.

உச்சநீதிமன்றம் உபுண்டு லினக்ஸினைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இதை ஒரு சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து அரசுத்துறை நிறுவனங்களும், அலுவலகங்களும் லினக்ஸினைப் பயன்படுத்த முன் வர வேண்டும். இந்த செய்தி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. நான் கீழே கொடுத்திருக்கும் இணைப்பிணை சொடுக்கி உச்ச நீதி மன்றம் உபுண்டு லினக்ஸிற்காக என்னென்னவெல்லாம் செய்திருக்கிறது என்று பாருங்கள். உபுண்டு நிறுவுதலும் மற்றும் சிறப்புகளும் எனும் தலைப்பில் ஒரு காணொளியினையும் அளித்திருக்கிறது.

இதைப்போல் தமிழக அரசு அளிக்கவிருக்கும் இலவச மடிக்கணினியில் லினக்ஸை நிறுவிக்கொடுத்தால் தமிழக அரசிற்கு 91.2 கோடி மிச்சமாகும். அத்துடன் லினக்ஸை பயன்படுத்தும் ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழும். ( ரிச்சர்ட் ஸ்டால்மன் ஒருமுறை கேரளாவிற்கு வந்திருக்கும் பொழுது , கேரளாவைப் போல் தமிழகமும் அனைத்துப் பள்ளிகளிலும் லினக்ஸைப் பயன்படுத்தி ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் என கேட்டுக்கொண்டார் ).

மேலும் தெரிந்துக்கொள்ள:
http://www.sci.nic.in/e-committee.htm
http://fullcirclemagazine.org/issue-51/